திருவண்ணாமலை,ஜூன் 6- திருமணமான 2 மாதத்தில் பெண் மரணமடைந்ததால், உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் சு. ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் புஷ்பா. செங்கம் தாலுகா பெரிய கல்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் விவேகானந்தன் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த நிலையில், ஜூன் 5 ஆம் தேதி புஷ்பா மர்மமான முறையில் மரண மடைந்துள்ளார். இரு தினங்களுக்கு முன், வரதட்சணை கேட்டு புஷ்பாவை விவேகானந்தன் குடும்பத்தினர் கொடுமை செய்து வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சணையை சில தினங்களில் கொடுத்துவிடுவதாகவும் சமாதானம் செய்து, புஷ்பாவை மீண்டும் விவேகானந்தன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும், விவேகானந்தன் குடும்பத்தினர் புஷ்பாவை வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக புஷ்பாவின் உறவினர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.