தமிழகத்தில் தக்காளி வைரஸ் பரவல் பரவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்ற கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும், பொதுமக்கள் முழுக்கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். பொதுவெளியில் நடமாடும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக்கொள்ள வேண்டும், என்றார்.
மேலும், கேரள மாநிலத்தில் தக்காளி வைரஸ் நோயின் தாக்கம் தமிழகத்தில் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. கேரள மாநிலத்திலும் தற்போது இல்லை. என அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே, இதுகுறித்து தமிழகத்தில் அச்சப்பட வேண்டியதில்லை. அதேபோல் கேரள மாநிலத்தில் ஷவர்மா உணவால் ஏற்பட்ட பிரச்சனையில் தீவிரத்தை உணர்ந்து தமிழகம் முழுவதும் கடைகளில் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஷவர்மா தடை என்ற செய்தியிலும் உண்மை இல்லை. ஷவர்மா விற்பனைக்கு தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், பதப்படுத்தப்பட்டு நன்கு சமைத்து இரண்டு மணி நேரத்திற்குள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.