பொருநை புத்தக திருவிழாவில் திரையிட இருந்த இன்ஷா அல்லா திரைப்படம் இந்துத்துவவாதிகளின் எதிர்ப்பின் காரணமாக மாவட்ட நிர்வாகம் திரையிட மறுப்புத் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் 5வது பொருநை புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக திரையிடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உலகத் திரைப்படங்கள் மட்டுமல்ல தமிழ்த் திரைப்படங்களும் திரையிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் லெனின் பாரதி இயக்கிய ’மேற்குத் தொடர்ச்சிமலை’, ஃப்ராங்ளின் இயக்கிய ‘ரைட்டர்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இஸ்லாமிய மக்களின் வாழ்வியலைப் பேசும் படமான இன்ஷா அல்லா படமும் திரையிட இருந்தது. இந்தப் படத்தை இயக்கியவர் உலக சினிமா பாஸ்கரன். இன்று (27.3.2022) புத்தகத் திருவிழாவில் நடைபெற இருந்த திரையிடலில் ’இன்ஷா அல்லா’ படத்தை திரையிடக் கூடாது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
இந்தப் படத்தை திரையிடக்கூடாதென இந்துத்துவ இயக்கத்தைச் சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் படத்தை திரையிடக்கூடாதென உத்தரவு வந்துள்ளது.
இதுகுறித்து இத்திரைப்படத்தின் இயக்குனர் கூறுகையில், “இத்திரையிடல் நிகழ்வுக்குப் பாதுகாப்பு அளித்துத் திரையிடலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால் நிகழ்வை ரத்து செய்தது கெடுவாய்ப்பானது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் கொண்டு வலதுசாரி குழுக்களை கட்டுப்படுத்த வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.