தஞ்சாவூர், ஜன.24 - மயானச் சாலையை சீர் செய்து தர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் உ.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா 88 - வடபாதி உடையார்கோவில் கீழத்தெருவில் அமைந்துள்ள மயானச் சாலையில் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இது பராமரிப்பின்றி ஒத்தையடிப் பாதையாக மாறிவிட்டது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. மேலும், முள் செடிகள் படர்ந்து கிடப்பதால், இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே இந்தச் சாலையில் உள்ள புல், புதர்களை அகற்றி மயானச் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.