மயிலாடுதுறை, ஜன.17 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான சந்திரபாடி என்ற கடலோர மீனவ கிராமத்தில், மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் பொங்கல் விழா கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி தலைவர் பிரமிளா ராஜ்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், தனித்திறன் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் என கிராமமே குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், காணும் பொங்கலான வியாழனன்று சந்திரபாடி முட்டுக்கரையாற்றில் இளைஞர்களுக்கான முக்களப் போட்டிகள் நடந்தன. அதில், 500 மீட்டர் தொலைவு நீச்சலடித்து வந்து கரையில் நிறுத்தப்பட்ட மிதிவண்டியை எடுத்து, ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள சின்னூர்ப்பேட்டை கிராமத்திற்கு ஓட்டிச் சென்று, அங்கே மிதிவண்டியை நிறுத்திவிட்டு மீண்டும் போட்டி துவங்கிய இடத்திற்கு ஓடி வர வேண்டும். இப்போட்டியில் இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு வெற்றிப் பெற்றனர். முன்னதாக முட்டுக்கரையாற்றில் நடந்த படகுப் போட்டியில் ஏராளமான படகுகள் பங்கேற்றன. அதனைத் தொடர்ந்து சந்திரபாடி கோயில் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகள், பரிசளிப்பு கலை நிகழ்ச்சிகளில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.