கொச்சி, டிச.17- அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் அரசின் கடனில் சேர்க்கப்படாது என்று ஒன்றிய அரசு மாநிலங்களவையில் தெளிவுபடுத்தியுள்ளது. இது கேரளத்தில் கிஃப்பி கடன் தொடர்பாக மாநில அரசின் மீது குதிரையேற்றம் செய்யும் சிஏஜிக்கு ஏற்பட்ட பின்னடைவு என்று கேரள முன்னாள் நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் கூறினார். மாநிலங்களவையில் சிபிஎம் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து மத்திய துணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி இதை தெரிவித்தார் எனவும் கிப்பி நிதி சேகரிப்பு குறித்து கேரள அரசு கூறியதும் இதுதான் எனவும் தாமஸ் ஐசக் விளக்கமளித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், சிஏஜியின் கிஃப்பி மீதான குறிப்பை வைத்து மாநில அரசுக்கு எதிராக விமர்சனம் முன்வைத்த எதிர்க்கட்சிகள் மற்றும் சில ஊடகங்களுக்கு ஒன்றிய அரசின் நிலைப்பாடு பதிலடியாக உள்ளது. ஒன்றிய அரசு நிறுவனமான தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சாலை அமைப்பதற்காக ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இந்த கடன் ஒரு வருடாந்திர திட்டமாகும். சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டால், அதற்கு தேவையான தொகை 15 முதல் 20 ஆண்டுகள் வரை தவணை முறையில் கடனாக எடுக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும், அதன் கடன் ஒன்றிய அரசின் கடன் தொகையில் சேர்க்கப்படவில்லை.
ஒன்றிய அரசின் 2019-20 ஆம் ஆண்டிற்கான கடன் தொகையான ரூ.10 லட்சம் கோடியில், மத்திய நிறுவனங்களால் அந்த ஆண்டு எடுக்கப்பட்ட பட்ஜெட்டுக்கு வெளியே உள்ள ரூ.1.26 லட்சம் கோடி கடன்கள் சேர்க்கப்படவில்லை. 2020-21ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு மொத்தமாக வாங்கிய ரூ.20 லட்சம் கோடியில் அந்த ஆண்டுக்கான மத்திய நிறுவனங்களின் கடனாக ரூ.1.48 லட்சம் கோடி சேர்க்கப்படாது என்று ஒன்றிய அரசு இப்போது கூறியுள்ளது. கிஃப்பியின் நிதி திரட்டல் என்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வருடாந்திர திட்டத்தைப் போன்றதாகும். ரூ.70,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசு கிஃப்பியை நியமித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மோட்டார் வாகன வரியில் பாதியை ஆண்டுத் தொகையாக செலுத்துகிறது. கிஃப்பி மூலம் வாங்கிய கடனுக்கு மாநில அரசு கடனாளியாக இருக்க வேண்டியதில்லை. கிஃப்பி மூலம் வாங்கிய கடனை மாநில அரசின் மொத்தக் கடனில் சேர்க்காதது ஏன் என்றும், பென்ஷன் நிறுவனம் வாங்கிய கடனை மாநில அரசின் கடனில் சேர்க்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய சிஏஜி, அதை ஏன் ஒன்றிய அரசிடம் சட்டவிரோதமானது என்று கூறவில்லை? எனவும் தாமஸ் ஐசக் கேட்டார்.