நாகப்பட்டினம் நவ.13 - வெண்மணி களப் போராளியான மீனாட்சி சுந்தரம் அவர்களின் 11 ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அருந்தவப்புலத்தில் நடந்த இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி புகழஞ்சலி செலுத்தினார். நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவபுலம் கிராமத்தில் வாழ்ந்த வி.எம்.எஸ் என்று மக்களால் அழைக்கப்பட்ட வே.மீனாட்சி சுந்தரத்தின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் நாகமங்கலம் கிளைச் செயலாளர் ஏ.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் தாலுகா செயலாளராக பணிபுரிந்தவர் மீனாட்சிசுந்தரம். 1968 டிசம்பர் 25 வெண்மணி நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து நீதிக்காக போராடியவர். கீழதஞ்சையில் நிலவி வந்த நிலவுடமை கோட்பாட்டை எதிர்த்து களம் கண்டவர். பல ஆண்டுகாலம் சிறை வாழ்க்கை, தலைமறைவு வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு தியாகங்களை உழைக்கும் வர்க்க மக்களுக்காக அர்ப்பணித்தவர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியவர். அவருடைய நினைவு தின நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி செங்கொடி ஏற்றி வைத்து புகழஞ்சலி செலுத்தினார். கட்சியின் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, கோவை பீளமேடு நகரக் குழு உறுப்பினர் வி.எம்.ஜோதிபாசு, கோவை 28 ஆவது மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு, திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.