அறந்தாங்கி, பிப்.25 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூரில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 13 காளைகளும், 117 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். ஒரு காளைக்கு 9 பேர் வீதம் களத்தில் இறக்கப்பட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் போட்டியை கண்டு களித்தனர். ஒவ்வொரு காளைகளுக்கும் 25 நிமிடம் ஒதுக்கப்பட்டது. 25 நிமிடங்களுக்குள் பிடிபடாத காளைகள் வெற்றி பெற்றதாகவும், 25 நிமிடங்களுக்குள் காளைகளை அடக்கிய வீரர்கள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம், ஒன்றியக் குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், சிலட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராணி ராஜா, கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் திருநாவுக்கரசு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அறந்தாங்கி காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.