districts

தீயணைப்புத் துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தஞ்சாவூர், ஆக.14 -

       தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் உத்தரவின் பேரில், தன்னார்வலர்களுக்கு தீத்தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிய பயிற்சி நடைபெற்றது.

     தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில், பருவமழை காலத்தில், இயற்கை பேரிடரின் போதும், மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது எப்படி, மின் விபத்து காலங்களில் எவ்வாறு செயல்படுவது, தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தன்னார்வலர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர்.

     இதில், பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தொடர்ந்து அதிகளவிலான தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.