குடவாசல், ஜன.10 - குடவாசல் வட்டத்தில் நடப்பு சம்பா தாளடி பயிர்கள் 13,955 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. வரப்பில் ஊடுபயிராக உளுந்து 1323 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா, தாளடி அறுவடைக்கு பிறகு நெல் தரிசில் உளுந்து மற்றும் பாசிப்பயறு சாகுபடி செய்யும்போது குறைந்த ஈரப்பதத்தில் செலவில்லாமல் வருமானம் கிடைக்கும். மேலும் பயறு வகை பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தினை வேர் முடிச்சுகள் மூலம் மண்ணில் நிலைநிறுத்தி மண் வளம் கூடுகிறது. தொடர்ந்து நெல் சாகுபடி செய்யப்படுவதால் மண்ணில் காற்றோட்டமின்றி மண் வளம் குன்றி தழைச்சத்து குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் மெழுகு பதத்தில் வயல் இருக்கும் பொழுது அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக பயறு வகை பயிர்களை தெளிக்க வேண்டும். அறுவடை இயந்திரங்களை பயன்படுத்தும் பொழுது அறுவடைக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக தெளித்து அறுவடை செய்ய வேண்டும். பயறு வகைப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்ய தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக மானிய விலையில் இடுபொருள்கள் வழங்கி சாகுபடி பரப்பினை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உளுந்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களான வம்பன் 6, வம்பன் 8 ஆகிய ரகங்களை பயிரிடலாம். ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதையும், உயிர் உரம் ரைசோபியம் 500 மில்லி, பாஸ்போ பாக்டீரியா 500 மில்லி, பயறு வகை எண் சத்து 2கி, 50 சதவீத மானிய விலையில் வழங்கிட குடவாசல் வட்டாரத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் வாங்கி பயன்பெற குடவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கே.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.