தூத்துக்குடி , ஜன. 1 தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், சங்கத்தின் மாவட்டத்தலைவர் ராகவன், மாவட்டச் செயலாளர் பா.புவிராஜ் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், “தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், கயத்தார், கருங்குளம் ஒன்றியத்தின் ஒரு பகுதி ஆகியவற்றில் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கி தற்போது செடியிலேயே முளைத்து போய் உள்ளது. மக்காசோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் மழையில் சாய்ந்து உள்ளது. அதே போல் மிளகாய், உள்ளி, மல்லி உள்ளிட்ட பயிர்களும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆறு நீர் பாசன பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வார்திருநகரி, கருங்குளம் உள்ளிட்ட பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் வாழைகளும் தண்ணீரில் மூழ்கி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பல இடங்களில் ஆற்றிற்கு அருகிலுள்ள விளை நிலங்களில் 3 அடி உயரத்திற்கு மண் திட்டு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் முழுவதும் பாதிக்கப்பட்டு பெரும் துயரில் உள்ளனர். எனவே நெல் மற்றும் மானாவாரி பயிர்களுக்கு தற்போது அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி குறைந்தபட்சம் ஏக்கர் ஒன்றிற்கு ரூ.20,000 வழங்க வேண்டும். பயிர் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கிராமங்களிலும் உடன் கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஐந்து ஏக்கர் என்ற நிபந்தனையின்றி நிவாரணம் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் விளை நிலங்களில் ஏற்பட்டுள்ள மண் திட்டுக்களை அரசே அப்புறப்படுத்தி விளை நிலங்களை சரி செய்திடும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். தனியார் நிலங்கள், கோவில், மடம் அறக்கட்டளை நிலங்களில் குத்தகை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் பாதிப்பிற்கான நிவாரணம் காப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு இழப்பு தொகை காப்பீட்டு நிறுவனங்கள் முறையாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும். உடைப்பு ஏற்பட்டுள்ள அனைத்து நீர்நிலைகளையும் செப்பனிட்டு கரைகளை பலப்படுத்திடும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வேளாண் விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு குறுகிய கால நெல் விதைகளை மானிய விலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். வயல்கள் பதிந்துள்ள உழவடை கருவிகளை வெளியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.