தஞ்சாவூர்/திருச்சிராப்பள்ளி, ஜூன் 9-
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடி கிராமத்திலுள்ள முதலைமுத்துவாரி வடிகால் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 3.50 கி.மீ. தூரம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியை முதலமைச்சர் ஆய்வு செய்தார். இந்தத் தூர்வாரும் பணியின் மூலம் சென்னம்பட்டி, குருவாடிப்பட்டி மற்றும் நாட்டாணி கிராமங்களில் மழையினால் ஏற்படும் வெள்ள சேதங்கள் தடுக்கப்படும். வண்ணாரப்பேட்டை கிராமத்தில் சுமார் 2,042 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
விண்ணமங்கலத்தில் உள்ள “இ” பிரிவு வாய்க்காலின் வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 2.50 கி.மீட்டர் தூரம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்தத் தூர்வாரும் பணிகள் மூலம் பூதராயநல்லூர், விண்ணமங்கலம். தீச்சசமுத்திரம் மற்றும் வெங்கடசமுத்திரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 450 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள கூழையாற்றில் ரூ.194.80 லட்சம் மதிப்பீட்டில் 7.79 கி.மீ தூரம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
இந்த வடிகால் தூர்வாரப்படுவதன் மூலம் மேட்டுப்பட்டி, திண்ணியம், செங்கரையூர் மற்றும் டி.கல்விக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நிலங்கள் வெள்ளப் பாதிப்பில் இருந்து தடுக்கப்படும்.
ஆலத்தூர் மற்றும் இலால்குடி வட்டங்களில் அமைந்துள்ள இருதயபுரம் மற்றும் வெள்ளனூர் கிராமங்களில் நந்தியாற்றின் நீரோட்டப் பாதையில் உள்ள முட்செடிகளை முழுவதுமாக அகற்றி அதை 5.90 கி.மீ. நீளம் தூர்வாரி இரு பக்கக் கரைகளையும் பலப்படுத்த ரூ.194.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப் பணியையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் ஆய்வு செய்தார். இதன் மூலம், ஊட்டத்தூர், நம்புக்குறிச்சி, பெருவளப்பூர், காணக்கிளியநல்லூர், வந்தலை கூடலூர், சங்கேந்தி மற்றும் வெள்ளனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5777 ஏக்கர் பாசனப் பரப்புகள் வெள்ள பாதிப்பிலிருந்து தடுக்கப்படும்.
இந்த தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டால், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்களில் உரிய நேரத்தில் கடைமடை வரை தங்குதடையின்றி சென்றடையவும் மற்றும் வெள்ளக்காலங்களில் விரைவில் தண்ணீர் வடியவும் ஏதுவாக இருக்கும்.
தொடர்ந்து முதல்வர் இலால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிபவர்களிடம் கலந்துரையாடி அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை கே.என்.நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனிமாணிக்கம், ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன். எ.சௌந்திரபாண்டியன், என்.தியாகராஜன், எஸ்.ஸ்டாலின் குமார், ஜவாஹிருல்லா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்ஷனோ., தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.