districts

img

தஞ்சாவூர் பெரிய கோயிலில் அக். 24, 25-இல் சதய விழா

தஞ்சாவூர், அக்.19 -  தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா அக்டோபர் 24, 25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் சதய விழாக் குழுத் தலைவர் து.செல்வம் வியாழக்கிழமையன்று கூறியதாவது: மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் அக்டோ பர் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.  இதைத் தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் புலத் தலைவர் கோ. தெய்வநாயகம் தலைமையில் நடை பெறும் கருத்தரங்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் மு.இராஜேந்திரன், இந்திய தொல்லியல் துறை கோயில் அளவீட்டுப் பிரிவு இயக்குநர் கே. அமர்நாத் ராம கிருஷ்ணன், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ. ஜெய பால், குந்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியர் இந்திரா அரசு, சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவர் அய்யம் பேட்டை ந. செல்வராஜ் ஆகியோர் பேசவுள்ளனர். பின்னர், மாலையில் திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவற்றைத் தொடர்ந்து 5.30 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 1,038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.  நிகழாண்டு இவ்விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, அறநிலையத் துறை இணை ஆணையர் சு. ஞானசேகரன், சதய விழாக் குழுத் துணைத் தலைவர் எஸ்.சி.மேத்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.