districts

img

தஞ்சாவூர் 7000 சதுர ஏக்கரில் விவசாயம் கேள்விக்குறி முதல்வரிடம் விவசாயிகள் முறையீடு

தஞ்சாவூர், ஜூன் 9-

      தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

     தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

     பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி சரகத்தில் உள்ள விவசாயம் பெறும், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கா லில், தலைப்பு பகுதியான வாளவந்தான் கோட்டை ஏரி அருகில், சோழகம்பட்டி காட்டுவாரி சைபனில் (சுரங்கப் பாதையில்) ஏற்பட்டுள்ள உடைப்பின் காரணமாக, உய்யக்கொண்டான் பாசனத்திற்கு முற்றிலும் தண்ணீர் வராத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால்  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, 15  கிராமங்களில், 20 ஏரிகள் மூலம், பாசனம் பெறும், சுமார் 7,000 ஏக்கர் விவசாயம் கேள்விக்குறியாக மாறி உள்ளது.  ஏப்.15-ஆம் தேதி அன்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சைபனை புதுப்பிப்பதாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் தற்காலிகப் பணி நடைபெற்ற போதும், நிரந்தரத் தீர்வு செய்யப்படவில்லை. ஒருபோக விவசாயம் செய்யும் இந்தப் பகுதி விவசாயத்தை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர் அளித்துள்ள மனுவில், “ செங்கிப்பட்டியில் உள்ள சானிடோரியம் மருத்துவமனைக்கு பல மாவட்டங்க ளைச் சேர்ந்த காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். மிக சிறப்பாக இருந்த இந்த மருத்துவமனை தற்போது செயலற்று உள்ளது. டி.பி சானிடோரியம் மருத்துவமனையை தரம் உயர்த்தி, அதே மருத்துவமனையில் பொது மருத்துவமனையும் இணைந்து செயல்படுத்த வேண்டும். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களை இணைக்கும் மையமாக செங்கிப்பட்டி உள்ளது. திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகிறது. காயமுற்றவர்களுக்கு முதலுதவி செய்ய  முடியாததால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே அதிகம் இறப்பு நேரிடுகிறது. எனவே டி.பி சானிடோரியம் காசநோய் மருத்துவ மனையை தரம் உயர்த்தி, பொது மருத்துவமனையாக செயல்பட வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

     பூதலூர் தாலுகா அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு நிரந்தர பணியாளர் நியமிக்க வேண்டும். உடற்கூறாய்வுக்கு வரும் உடல்களைப் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டிகள் வழங்க வேண்டும்.  

    பூதலூர் தாலுகா உசிலம்பட்டி கிராமத்தில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. சில வருடங்களுக்கு முன்னால் பள்ளி மூடப்பட்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டைக்கு ஐந்து கிலோமீட்டர் நடந்து சென்று 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர்.  தற்போது உசிலம்பட்டி கிராமத்தில் சுமார் 70 குழந்தைகள் உள்ளனர். உசிலம்பட்டியில் தொடக்கப் பள்ளி  திறந்து குழந்தைகளின் கல்வி கண் திறக்க வழி செய்ய வேண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.