districts

ஆசிரியர் பணியிட போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு ஆக.18இல் தொடக்கம்

தஞ்சாவூர், ஆக.11-

      தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக, போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  

   தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2023 ஆம் ஆண்டு திட்டநிரலில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6,553 காலிப் பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3,587 காலிப் பணியிடங்களுக்கும் போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

    இதற்கான கல்வித்தகுதி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டி.டி.எட் படித்திருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, இந்த போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஆக.18 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

    தொடர்ந்து இப்பயிற்சி வகுப்பானது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பு அனுபவமிக்க சிறப்பு வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படுவதோடு, பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் தேர்வின் பெயர், தங்களது பெயர் மற்றும் கல்வித்தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் அனுப்பி, தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், தொடர்புக்கு அலுவலக தொலைபேசி எண்களை 04362-237037 / 9499055905 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.