தரங்கம்பாடி, மே 11- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது. சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 103 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 90 பேர் தேர்ச்சி பெற்று, 87.38 சதவீதத்தை இப்பள்ளி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வு எழுதிய புனிதவதி என்ற மாணவி அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்களுடன், 493 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று உள்ளார். சாதனைப் படைத்துள்ள மாணவி இலுப்பூர் தெற்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரது தந்தை முத்துகுமாரசாமி கூலி வேலை செய்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதனை படைத்த மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.