districts

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: விசாரணை நடத்த 4 மாத கால அவகாசம்

மதுரை, டிச.20-  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் 4 மாத கால நீட்டிப்பு வழங்கி மதுரை  மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதீமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகி யோரை சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கி யதில், கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிந்தது. 9 பேர் மீது குற்றப்பத்திரிகையை கடந்த 2020 செப்டம்பரில் சி.பி.ஐ., தாக்கல் செய்தது. இந்தகொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு, ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.  அதில், வழக்கில் எதிரிகளாக சேர்க் கப்பட்டுள்ள போலீசார் செல்வாக்கு மிக்கவர்கள். சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள் ளது. எனவே மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 2 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணைக்கு, மேலும் 4 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிடக் கோரி மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதி மன்றம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி வடமலை முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் தரப்பில் ஒவ்வொரு வழக்கறிஞரும் தனி தனியாக குறுக்கு விசாரணை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. கால தாமதம் ஆகிறது. எனவே, மேலும் 4 மாத  கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  இதை தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் வழக்கு விசாரணைக்கு மேலும் 4 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.