தஞ்சாவூர், டிச.11- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா திங்களன்று நடைபெற்றது. திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் அழகிரி சுப்பையா ராஜா வரவேற்றார். தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏ-வுமான கா.அண்ணாதுரை தலைமை வகித்தார். பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார் முன்னிலை வகித்தார். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் கார்த்திகேயன் வேலுச்சாமி, அவைத்தலைவர் சுப.சேகர், மாவட்ட துணைச் செயலாளர் பொன்.சத்தியமூர்த்தி, கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மயில்வாகனன் நன்றி கூறினார். ஜப்பானிய மியாவாக்கி முறையில் வேம்பு, வாகை, இலுப்பை, கருங்காலி, தேக்கு, குமிழ் உட்பட பல்வேறு வகையான 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.