திருச்சிராப்பள்ளி, ஆக.11 -
விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுக்க வேண்டும். ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.54-ம், ஒரு டன் கரும்புக்கு ரூ.800-ம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கோதாவரி - காவிரி இணைப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 15 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவை வியாழனன்று காலை நேரில் சந்தித்தார்.
அப்போது தொடர் போராட்டம் குறித்து முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார்.