மதுரை, ஜன. 8- மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கலையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது மதுரை அவனியாபுரத்தில் ஜன.15, பாலமேட்டில் ஜன.16, மற்றும் உலகப்புகழ்பெற்றது எனக் கூறப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17-ஆம் தேதியும் நடைபெறுகிறது. பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் ஜன.10-ஆம் தேதி பகல் 12 மணி முதல் ஜன.11-ஆம் தேதி பகல் 12 வரை பதிவு செய்யலாம். மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும். மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாட்டின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை ஜன.10-ஆம் தேதி பகல் 12 மணி முதல் ஜன.11-ஆம் தேதி பகல் 12 வரை பதிவு செய்யலாம்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கனை பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் காளைகள் அதிகமாக அவிழ்க்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் செல்வகுமார் மதுரை ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு காளைகளுடன் காளைகளின் உரிமையாளரின் பெயரை சாதிப் பெயருடன் சேர்த்து அறிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வோர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க விதிகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவை ஜல்லிக்கட்டு விழா கமிட்டிகள் அமுல்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.