districts

ரெங்கம்மாள்சத்திரம் நரிக்குறவர் இனமக்கள் 250 பேருக்கு பழங்குடியினர் சான்றிதழ்

புதுக்கோட்டை, ஆக.8-

     புதுக்கோட்டையை அடுத்த ரெங்கம்மாள் சத்திரம் நரிக்குறவர் இன மக்கள் 250 பேருக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் மற்றும் ரூ.9.30 லட்சம் நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்.  

    பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் வெள்ளனூர் ஊராட்சிக்குட்பட்ட ரெங்கம்மாள்சத்திரம் நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில்கொண்டு, ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.9.30 லட்சம் மதிப்பில் ஊசி, பாசி செய்வதற்கான உபகரணங்களையும், 250 பேருக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  

    இதன்மூலம், பழங்குடியினருக்கு அரசினால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும், அவர்களது குழந்தைகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் உதவியாக இருக்கும். மேலும் அவர்களின் தொழில் வளர்ச்சியினை மேம்படுத்திக் கொள்ள அரசு மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை பெறலாம்.

     எனவே, அரசால் வழங்கப்பட்டுள்ள இந்த சாதிச் சான்றிதழ்களை பயன்படுத்தி, தங்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி அளிக்கவும், கடனுதவிகளை பெற்று தொழில்களை மேம்படுத்திடவும் முன்வர வேண்டும். மேலும் இப்பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை, மின்வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். நிகழ்ச்சியில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.