districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: மல்லிப்பட்டினம் குடியிருப்புப் பகுதியில் தேங்கிக்கிடந்த மழைநீர் அகற்றம்

தஞ்சாவூர், நவ.23 -  தீக்கதிர் செய்தி எதிரொலியாக, மல்லிப்பட்டினம் பகுதியில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நேரில் ஆய்வு செய்து, தேங்கிக் கிடந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.  தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகரில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்கிக்கிடந்ததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இதனால், கொசுத்தொல்லை, காய்ச்சலால் குழந்தை கள், முதியவர்கள் அவதிப்பட்டு வந்தனர். பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அண்மையில் தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது.  இதனையறிந்த சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்து மாணிக்கம், கொட்டும் மழையிலும் அப்பகுதியில் நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது, மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் பகுதியில், ‘புதியதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைக்கும், பழைய சாலைக்கும் உயரம் வித்தியாசம் இருப்பதால் அப்பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளது’ என்று சமூக ஆர்வலர் அசாருதீன் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றியக்குழு தலைவரிடம் எடுத்துக் கூறினர்.  இதையடுத்து, ஒன்றியக்குழு தலைவர் உத்தரவின் பேரில், ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மழை நீர் தேங்காமல் வடிவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  மேலும், இந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட சாலையை பார்வையிட்டு, அதே அளவில் பழைய சாலை, தண்ணீர் தேங்காத வகையில் உயரமாக அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.  இதையடுத்து துரித நடவடிக்கைகள் மேற்கொண்ட ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், செய்தி வெளியிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த தீக்கதிர் நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நன்றியை தெரிவித்தனர்.