districts

img

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 4 ஆம் முறையாக இடம்பெற்ற கும்பகோணம் பேராசிரியர்

கும்பகோணம், ஆக.28- உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து 4 ஆம் முறையாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கல்லூரிப் பேராசிரியர் இடம்பெற்றுள்ளார். உலகில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முதல் 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை அமெரிக்காவின் ஸ்டான் ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவிலிருந்து 3,500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியலில், பூஞ்சையியல் மற்றும் ஒட்டுண்ணியியல் பிரிவில் கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் கோவிந்தராஜன் இடம் பெற்றுள்ளார். இவர், நானோ தொழில்நுட்பம் மூலம் இயற்கையான மருந்துகளை கண்டறிந்து டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ்களை பரப்பும் கொசுக்கள், விவசாயப் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகளை கண்டுபிடித்துள்ளார். நானோ தொழில்நுட்பம் மூலம் மனித நோய்களை தடுக்கும் இயற்கையான மருந்துகள் சார்ந்த ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார்.  கடந்த 2019, 2020, 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் பேராசிரியர் கோவிந்தராஜன் பெயர் இடம் பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து 4 ஆம் முறையாக 2022 ஆம் ஆண்டிற்கான பட்டியலிலும் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவருக்கு கல்லூரி முதல்வர் (பொ) அகிலா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.