தஞ்சாவூர், ஜூலை 16-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குருவிக்கரம்பை ஊராட்சி, கஞ்சங்காடு கிராமத்தில் அமைந்துள்ளது பூங்குடிக்குளம். பொதுப் பணித்துறை கல்லணைக் கால்வாய் கட்டுப்பாட்டில் உள்ள இக்குளம், 28 ஏக்கர் பரப்பளவும், 1,300 மீட்டர் நீளமுள்ள கரையுடன் 10.5 கிலோ மீட்டர் அளவிலான பாசன வாய்க்காலாக உள்ளது.
நண்பன் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் நிதி உதவி மற்றும் குருவிக்கரம்பை ஊராட்சியின் முயற்சியால், பூங்குடிக்குளம் சீரமைப்பு மற்றும் குறுங்காடுகள் அமைப்பதற்கான பணிகளை குருவிக்கரம்பை ஊராட்சித் தலைவர் வைரவன் தொடங்கி வைத்தார். இதில் கறம்பக்காடு ஊராட்சி தலைவர் அர்ச்சனாகுகன், நண்பன் பவுண்டேஷன் ட்ரஸ்டி நிமல்ராகவன், கஞ்சங்காடு பாசனதாரர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.