மக்கள் ஆட்சியரிடம் மனு புதுக்கோட்டை, பிப்.7- விராலிமலை அருகே காரடைக்கன்பட்டியில் அரசு மதுபானக்கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, இராஜாலிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காரடைக்கன்பட்டி கிராமத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் என்.மாலிங்கம் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: எங்கள் கிராமத்தில் அரசு மதுபானக்கடை (டாஸ்மாக்) அமைய உள்ளதாக அறிகிறோம். இந்தக் கடை அமைய உள்ள இடத்திற்கு அருகிலேயே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தக் கடை வழியாகத்தான் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பயணித்து வருகின்றனர். இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான சிரமம் ஏற்படும். மேலும், மாணவர்கள் மதுபோதைக்கு ஆளாகும் சூழல் உருவாகிவிடும். எனவே, மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி இங்கு டாஸ்மாக் கடை அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.