districts

img

கம்பர் மணிமண்டபம் குறித்து அவதூறு: சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக!

மயிலாடுதுறை, மே 27-  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள தேரழந்தூரில் மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள், கம்பர் மணிமண்டபம், கம்பர் மேடு உள்ளிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, மதவெறியர்களின் பொய் பிரச்சாரம் குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் விவாதித்து விசாரணை மேற்கொண்டனர்.  இது தொடர்பாக, மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு சிறுபாண்மை மக்கள் நலக்குழு இரு அமைப்பின் மயிலாடுதுறை மாவட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில், மயிலாடுதுறை மாவட்டத்தில், கம்பர் பிறந்த ஊரான தேரழந்தூரில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த இடத்தைப் பற்றி மிக மோசமாக, சில விஷ விஷமிகள் பதிவிட்டுள்ளனர்.  அந்த பதிவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான, வசந்தமண்டபம் படத்தை பதிவிட்டு கம்பர் பிறந்தஇடம் எனக் காட்டியுள்ளனர். மேலும், இங்குள்ள இந்துக்களின் பூர்வீக சொத்துக்களையெல்லாம் இஸ்லாமியர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்றும், கம்பருக்குச் சொந்தமான இடத்தையெல்லாம் இஸ்லாமியர்கள் கைவசப்படுத்தி விட்டதாக மத மோதலை தூண்டும் விதமாக பதிவிட்டுள்ளனர்.            கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தேரழந்தூர் வருகை தந்து கம்பர் வாழ்ந்த இடம் மற்றும் மணி மண்டபத்தை பார்வையிட்டுச் சென்ற பிறகுதான், இப்படிப்பட்ட பொய்ப்பிரச்சாரம் அரங்கேறியுள்ளது. இதுசம்பந்தமான உண்மைகளைக் கண்டறியும் நோக்கத்தோடு கள ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அமைப்புகள் இணைந்து, தமிழக மக்கள் ஒற்றமை மேடையின், மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சிம்சன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் எஸ். ஜான்சன், மயிலாடுதுறை ஒன்றிய சிபிஎம் செயலாளர் டி.ஜி.ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமுல் காஸ்ட்ரோ, குத்தாலம் ஒன்றியச் செயலாளர் ராமகுரு உள்ளிட்டோர் கொண்ட குழு தேரழந்தூர் சென்று கம்பர் பிறந்த இடத்தை ஆய்வு செய்தோம்.  கம்பர் மணிமண்டபம் சீரமைக்கப்பட்டு நல்ல நிலையில் பராமரிக்கப்படுகிறது. வாட்சப்பில் வரும் 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட “பெருமாள் கோவில் வசந்த மண்டபம் தற்போது புதுப்பிக்கப்பட்டு செயல்படுகிற கம்பர் பிறந்த இடம் எனக் கூறப்படும் கம்பர் மேடு என்கிற இடம்,

சுற்றிலும் கம்பி அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் பராமரிக்கப்படுகிறது. பதிவில் உள்ளது போன்று வேறு எந்தவிதமான தவறான செயல்களும் நடைபெறவில்லை என தெரிய வந்துள்ளது.  இங்கு வசிக்கக் கூடிய இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்து மத விழாவாக இருந்தாலும், இஸ்லாமிய திருவிழாவாக இருந்தாலும் ஒன்று கூடி கொண்டாடுகிறோம். இஸ்லாமியர் ஆக்கிரமிப்பு என்பது முற்றிலும் பொய். இங்குள்ள பிராமணர்கள், மற்ற சமூகத்தினர் தங்கள் பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படி செல்பவர்கள் தங்கள் இடத்தை விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படி விற்கும் போது பெரும்பாலும் இஸ்லாமியர்கள் கிரயமாக வாங்கிக் கொள்கிறார்களே தவிர, ஆக்கிரமிப்பு என சொல்வது திட்டமிட்ட பொய் பிரச்சாரம் என கூறினர்.  இப்படி உண்மைக்கு புறம்பான செய்தியை பதிவிட்டு கலவரம் உருவாக்கும் கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம். மத மோதலை உருவாக்கும் வகையில் கம்பர் மணிமண்டபம் குறித்து, சமூக வலை தளங்களில் அவதூறு பதிவுகளை பதிவிடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, இரு அமைப்பின் மயிலாடுதுறை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.