districts

img

நீட் தேர்வை பயன்படுத்தி மாணவர்களை கொலை செய்கிறது ஒன்றிய பாஜக அரசு

பெரம்பலூர், ஆக.29 - நீட் தேர்வை பயன்படுத்தி மாணவர்களை ஒன்றிய பாஜக அரசு கொலை செய்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திமுக பெரம்பலூர் - அரியலூர் மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், பெரம்பலூரில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் ம.பிரபாகரன் (பெரம்பலூர்) க.சொ.க கண்ணன் (ஜெயங்கொண்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:  சேலத்தில் வருகிற டிசம்பர் 17 அன்று நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டிற்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்து, முதல் கட்டமாக 25 லட்சம் வழங்கியுள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர். அதற்கு இளைஞர் அணி சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் என்னை பலரும் விமர்சிக்கிறார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்யும் முழு முயற்சியில் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். என்றைக்கு நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறதோ அன்றுதான் உண்மையான வெற்றி.  நீட் தேர்வு நிகழ்த்திய முதல் தற்கொலை அரியலூர் மாவட்டத்தில் தங்கை அனிதாவுக்கு நிகழ்ந்தது வேதனைக்குரியது. இந்த நீட் தேர்வு எப்படி தமிழ்நாட்டுக்குள் வந்தது. நுழைவு தேர்வை முதன்முதலாக ரத்து செய்தது கலைஞர் அவர்கள். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் போதும்; நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கிராமப்புறங்களில் இருந்து ஏழை-எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என்பதற்காக கலைஞர் இந்தத் தேர்வை ரத்து செய்தார்.  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் இருக்கும்போது நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அவர் இறந்த பிறகு ஆட்சி செய்த அடிமைகள் பாஜகவிற்கு பயந்து நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் நுழைத்தார்கள். அப்போது ஆரம்பித்தன இந்த தற்கொலைகள்.  கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 21 பேர் தற்கொலை செய்துள்ளனர். அரியலூர் அனிதாவில் ஆரம்பித்து 10 நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் என்ற மாணவர் வரை நீட் தேர்வு தற்கொலைகள் தொடர்கின்றன. ஜெகதீஷ் இறந்த பிறகு துக்கம் தாளாமல் அவரது தந்தையாரும் இறந்துவிட்டார்.  இதை தற்கொலை என்றுகூட சொல்ல முடியாது. ஒன்றிய பாஜக அரசு செய்த கொலை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு துணை நின்றது அடிமை அதிமுக. நீட் தேர்வு ரத்தாகும் வரை நம்முடைய அடுத்தடுத்த போராட்டங்கள் தொடரும்.  இவ்வாறு அமைச்சர் பேசினார்.