புதுக்கோட்டை, ஜன.18 - புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.169.94 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் பழுதடைந்த பள்ளிகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டு முதற்கட்டமாக ஏறத்தாழ 3,030 பள்ளிகளில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். தற்போது நிலவி வரும் கொரோனா சூழ்நிலையில் மக்களால் பெரிதும் கவனிக்கக் கூடிய துறைகளில் ஒன்று பள்ளிக் கல்வித்துறை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க வேண்டும் என்பதற்காக இல்லம் தேடிக் கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.