திருவாரூர்,நவம்பர்.2- நியாய விலைக்கடையில் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். விலைவாசியை குறைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திருவாரூர் கீழவீதியில் உள்ள நியாய விலைக்கடை முன்பு நூதனப்போராட்டம் நடைபெற்றது. விறகு அடுப்பு வைத்தும், பச்சை காய்கறிகளைக் கழுத்தில் மாலையாக அணிந்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.பவானி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பா.கோமதி பேசினார், மாவட்ட பொருளாளர் ஆர்.சுமதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.