மயிலாடுதுறை, அக்.8 - நியூஸ் நிறுவனம் மற்றும் ஓ.என்.ஜி.சி (நிதி நிறுவனம்) சார்பில் சதுப்புநில காடு வளர்ப்பு மற்றும் ஆலிவ் ரிட்லி ஆமை பாதுகாப்பு பயிலரங்கு பட்டறை காரைக்கால் பீச் ரிசார்ட்டில் நடைபெற்றது. தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சதுப்புநில மறுசீரமைப்பின் இயக்கவியலை அறிந்து கொள்ளும் வகையிலான இந்த பட்டறையில், சதுப்புநில விஞ்ஞானியும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் பல்வேறு குழுக்களில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் டாக்டர் கே.கதிரேசன் பங்கேற்றார். இவர், தென்னிந்திய கடலோர நீரில் சதுப்பு நில மறுசீரமைப்பு குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து, பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்தார். சதுப்பு நில பண்ணைகள் குறித்த தனது அனுபவங்களையும், சவால்கள் குறித்தும் வேளாண்மை துறை உதவி இயக்குநர், சதுப்புநில மரம் நடும் திட்டம் குறித்து வனம், மீன்வளம் மற்றும் உயிர் அறிவியல் துறை பேராசிரியர்கள், ஓஎன்ஜிசி அதிகாரிகள் உரையாற்றினர். இந்தப் பயிலரங்கு பட்டறையில் தேசிய அளவிலான கட்டிடக் கலைஞர்கள் பங்கேற்றனர். இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு சங்கமான நியூஸ் நிறுவனம் 10 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்புநில புனரமைப்பு பணிகளையும், காரைக்கால் கடலோர நீரில் ஆமைகள் பாதுகாப்பையும், ஓ.என்.ஜி.சி நிதியில் (சிஎஸ்ஆர்) முல்லையாறு மற்றும் உப்பனாறு ஆற்றங்கரைகளில் 6 ஹெக்டேர் பரப்பளவில் சதுப்பு நிலங்களை நடவு செய்துள்ளது. மேலும் இவை, அலையாத்திக் காடுகளை வளர்ப்பதிலும், விழிப்புணர்வு பணிகளையும் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.