districts

தொடர் மழை: பட்டாசு தயாரிப்பு பாதிப்பு

சிவகாசி, நவ.5- சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் வானம் மேகமூட்டத்துடனும், வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைவாகவும் இருந்து வருவதாலும் பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, உற்பத்தி செய்யப் படும் பட்டாசுகள் வெயிலில் நன்கு  உலர வைக்கப்பட்ட பின்பு தான் பெட்டிகளில் அடைத்து வைக்கப் படும். மேலும் பட்டாசு தயாரிப்ப தற்கான மூலப் பொருட்கள் கலவை செய்வதற்கு வெயில் மிகவும் அவசியமானதாகும். மேலும், பட்டாசுகளில் வேதிப் பொருட்கள் செலுத்திய பின்பு அதை வெயிலில் நன்றாக உலர வைக்க வேண்டும். இந்த நிலையில் சரிவர வெயில் இல்லாததால், பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பட்டாசு ஆலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தயாரான பட்டாசுகளை பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பும் பணிகள் மட்டுமே நடை பெற்று வருகிறது. கடந்த ஒரு வார காலமாக பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் சரிவர நடக்காததால், தீபாவளி இறுதிகட்ட விற்பனைக்காக அனுப்பப்படும் பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இருந்த போதும் நிகழாண்டு, வழக்கத்தை விட கூடுதலாகவே பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டிருப்ப தாகவும், தட்டுப்பாடு பெரிய அளவில் ஏற்படாது எனவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.