திருச்சிராப்பள்ளி, பிப்.27- தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலமாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழக முதலமைச்சரால் திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை வட்டத்தில் மொண்டியம்பட்டி கிராமத்தில் காணொலி காட்சி வாயிலாக கடந்த 5.8.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் 45 வயதுக்கு மேல் உள்ள சக்கரை வியாதி, உயர் இரத்த கொதிப்பு நோயாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று நேரடியாக பெண் சுகாதார தன்னார்வளர்கள் மூலமாக இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்துப் பெட்டகத்தினை வழங்குகின்றார்கள். மேலும் வட்டாரத்தில் உள்ள பக்கவாதம், புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் கை, கால் செயலிழந்து கிசிச்சை தேவைப்படும் நபர்களுக்கும் வீட்டிற்கே சென்று பிசியோதெரபி சிகிச்சைகள் மற்றும் நோய் ஆதரவு சிகிச்சைகள், வலி நிவாரண சிகிச்சைகளை மருத்துவக் குழுவினர் மேற்கொள்கின்றனர். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் சிறப்பு மருத்துவக் குழு வாகனம் மூலமாக வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிடோனியல் டையாலிஸ் சிகிச்சை பெறும் நபர்களுக்கு தேவைப்படும் பெரிடோனியல் டையாலிஸ் திரவ பாக்கெட்டுக்களை நோய் ஆதரவு சிகிச்சை வாகனம் மூலமாக வீட்டிற்கே சென்று வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். நீரிழிவு வியாதி உள்ள 41,612 நபர்களும், உயர் இரத்த அழுத்தம் உள்ள 30,004 நபர்களும், நீரிழிவு வியாதி (ம) உயர் இரத்த அழுத்தமுள்ள 22,890 நபர்களும், நோய் ஆதரவு சிகிச்சையில் 5,851 நபர்களும், இயன்முறை சிகிச்சைக்காக 6,268 நபர்களும், பெரிடோனியல் டையாலிஸ் சிகிச்சைக்காக 6 நபர்களும் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.