districts

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வகுப்பு

தஞ்சாவூர், ஜூலை 30 -

     தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் லயன்ஸ் சங்கம் சார்பில் பிளஸ் - 2 மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகுப்பு நடைபெற்றது.  பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) சோழபாண்டியன் தலைமை வகித்தார். லயன்ஸ் தலைவர் சிவநாதன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் அடைக்கல மணி வரவேற்றார்.

   டாக்டர் துரை.நீலகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,  “ நீங்கள் கவனத்துடன் இருந்தால், எதிர்பார்ப்புகள் குறித்த அழுத்தத்தை தவிர்க்கலாம், உள்ளம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்போது ஆர்வம் குறைந்த அல்லது மிகக் கடினமான பாடங்களை படிக்க வேண்டும். ஏமாற்று வேலை ஒருபோதும் வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றியைத் தராது. மிக முக்கியமான பகுதிகளில் கடின உழைப்பு அவசியமாகும்” என்று பேசினார்.  

    லயன்ஸ் வட்டாரத் தலைவர் குட்டியப்பன், செயலர் ராஜா, ஆசிரியர்கள் ராஜேந்திரன், சற்குணம், சின்னத்துரை, மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். பெண்கள் மேல்நிலைப் பள்ளி  இதேபோல், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லயன்ஸ் சங்கம் சார்பில் விளையாட்டு மாணவிகளுக்கு ஊக்குவிப்பு வகுப்பு நடந்தது. சமூக ஆர்வலர் நெடுவாசல் ராம்குமார் கலந்து கொண்டு, “தமிழகத்தில் இன்று பெரும்பாலும் வெஸ்டர்ன் டான்ஸ், கீ போர்டு, கிடார், கராத்தே, சிலம்பம் என அனைத்துக் கலைகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.  பொதுவாக பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற கலைகளை கற்றுக் கொள்வதை தான் விரும்புகின்றனர். மேற்கத்திய கலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நமது நாட்டுப்புறக் கலைகளுக்கு கொடுப்பதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை” என்று பேசினார்.

    இதில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (பொ) கார்த்திகேயன், லயன்ஸ் சங்கத் தலைவர் சிவநாதன், குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன், ஆசிரியர்கள் முரளி, பழனிச்சாமி, உடற்கல்வி ஆசிரியர்கள் ரெங்ககேஸ்வரி, அண்ணமேரி, நீலகண்டன், பாரதி, செயலர் ராஜா, லயன்ஸ் நிர்வாகி விநாயகமூர்த்தி, மாணவிகள் கலந்து கொண்டனர்.