பொன்னமராவதி, ஜூலை 15 -
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள 42 ஊராட்சிகளில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்பு மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆலவயல் ஊராட்சியில் கடந்த 12 வருடங்களாக பொறுப்பாளர்கள் மாற்றப்படாமல் இருந்து வந்துள்ளனர். அந்த உறுப்பினர்கள் அரசு சார்பில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும்போது, வறுமையில் உள்ள பெண்களுக்கு கடன்களை வழங்காமல், மகளிர் குழுக்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிகாரிகளின் துணையோடு கையாடல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர், சுய உதவிக் குழு பெண்களை மரியாதை இன்றி நடத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து வெள்ளியன்று ஆலவயல் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர் வி.அமுதா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், ‘ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
சுய உதவிக்குழுக்களின் இதுபோன்ற முறைகேடுகள், ஆலவயல் ஊராட்சி மட்டுமல்லாது, பொன்னமராவதியில் உள்ள 42 ஊராட்சிகளிலும் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இதனை மகளிர் திட்ட அலுவலர்கள் விசாரிக்காமல், மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு முறைப்படுத்த வேண்டுமென சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.