தூத்துக்குடி, நவ.14- தமிழ்நாடு மின்வாரியம் தூத்துக்குடியில் கம்பியாளராக பணி செய்த போது விபத்து காரணமாக மரணம் அடைந்த அழகேசன் மகனுக்கு வேலை வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தில் கம்பியாளராக பணியாற்றிய அழகேசன் 2.2.2017-இல் பணியின்போது மரணமடைந்தார். உரிய காலத்திற்குள் வாரிசு அடிப்படையில் வேலை கேட்டு அழகேசன் மகன் முத்துநிஜந்தன் விண்ணப்பித்தார். மனுவினை பரிசீலிப்பதில் தமிழ்நாடு மின்வாரியம் நீண்ட கால அவகாசம் எடுத்து இறுதியில் 3 ஆண்டுகள் முடிந்து விட்டதால் அவரது மனுவை நிராகரித்தனர். இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அழகேசன் மகன் முத்துநிஜந்தன் மனு (WP (MD) No.15807/ 2023) தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் ,மூன்று ஆண்டுகளுக்குள் வாரிசுக்கு வேலை கேட்டு விண்ணப்பிக்கப் பட்டுள்ளதால் நிர்வாகத்தால் ஏற்பட்ட காலதாமதத்திற்கு வாரிசுதாரர் பொறுப்பாக முடியாது என கூறி முத்து நிஜந்தனுக்கு 12 வாரத்திற்குள் வேலை வழங்கிட 1.11.2023 அன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கினை வழக்கறிஞர்கள் டி.கீதா மற்றும் என்.நந்தினிபிரியதர்ஷினி ஆகியோர் நடத்தினர். மேற்கண்ட செய்தியை சிஐடியு தலைவர்களில் ஒருவரான பி.இசக்கிமுத்து தெரிவித்துள்ளார்.