சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தகவல் கரூர், பிப்.20 - கரூர் மாவட்டத்தில் 74954 குழந்தைகளுக்கு தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நாடு தழுவிய தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் 3.3.2024 அன்று நடைபெறுவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.சந்தோஷ்குமார் இத்திட்டம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறுகையில், “இத்திட்டத்தை செயல்படுத்தும் பொருட்டு, கரூர் மாவட்டத்தில் 831 மையங்களில் (கூடுதல் மையங்கள் உட்பட) சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. அதில், கிராமப் பகுதியில் 726, நகராட்சிப் பகுதியில் 105 சொட்டு மருந்து மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். முகாமில் 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும், இதற்கு முன் எத்தனை தடவை சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை இச்சொட்டு மருந்து கூடுதல் தவணையாகக் கொடுக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுடன் இடம் பெயர்வோர், வெளி மாநிலங்களில் இருந்து கட்டுமானப் பணிகள் மற்றும் இதரப் பணிகளுக்காக தற்காலிகமாக குடிவந்தோர் தங்கியுள்ள பகுதிகளில் இருக்கும் குழந்தைகளில், ஒரு குழந்தைகூட விடுபடாமல் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். மேலும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முகாமினை சிறந்த முறையில் செயல்படுத்தும் பொருட்டு பல்வேறு அரசுத்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்கள் சுமார் 3417 பேர் இப்பணியில் பங்கேற்க உள்ளனர். முகாம் பணிகளை கண்காணிப்பதற்காக சுமார் 106 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளியூர் பயணம் செய்யும் மக்களும் பயன்பெற வசதியாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள முகாம்கள் 3.3.2024 முதல் 3 தினங்களுக்கு, இடைவிடாமல் 24 மணிநேரமும் செயல்படும். இந்த Transit Booth f&H கரூர் மாநகராட்சியில் 3 இடங்களிலும் குளித்தலை நகராட்சியில் ஒரு இடத்திலும் செயல்படும். கரூர் மாவட்டத்தில் 24 ஆண்டுகளாக (1999-க்கு பிறகு) போலியோ நோயினால் எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப்படவில்லை” என்றார்.