districts

ஊரைவிட்டு விலக்கி வைக்கப்பட்ட பெண் மீது தாக்குதல் நடத்திய கொடுமை

பொன்னமராவதி, ஆக.4 -

     புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கட்டையாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (35). இவரது கணவர் குமார். இந்த கிராமத்தில் இவர்களது சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வசிக்கின்றனர். ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் ராஜாமணியின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

   இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் முன்னிலையில், கட்சியில் இணைந்து இவர்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதை தொடர்ந்து வட்டாட்சியர் மூலமாக உரிய விசாரணை நடத்தி, இரண்டு முறை சமாதான கூட்டம் நடைபெற்றது.

    இதில், ராஜாமணி குடும்பத்தினரை ஊரில் சேர்த்துக் கொள்வது. ஊரின் பழக்கவழக்கப்படி அவர்களிடம் வரி உள்ளிட்ட வசூல்களை செய்வது என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 4 அன்று ஊரின் சார்பாக கட்டையாண்டிபட்டி கிராமத்தில் அன்னதானம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆக.6 அன்று நாடகம் நடைபெறுகிறது.

     இவ்விரு நிகழ்ச்சிகளுக்காக, ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களிடமும் வரி வசூல் செய்யப்பட்டது. ஆனால், ராஜாமணி குடும்பத்தினரிடம் மட்டும் வரி வசூல் செய்யப்படவில்லை.  இதுகுறித்து ராஜாமணி பொன்னமராவதி வட்டாட்சியரிடம் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் ஆகஸ்ட் 2 அன்று, வருவாய்த் துறையினர் கிராமத்தில் விசாரணை நடத்தினர்.  

    அப்போது ஊர் முக்கியஸ்தர்களின் தூண்டுதலின் பேரில், அங்கிருந்த பெண்கள் சிலர், ‘ஊர் முடிவை எதிர்த்து ஏன் புகார் செய்தாய்? உன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது வைத்ததுதான்’ எனக் கூறி ராஜாமணியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    தாக்குதலுக்கு உள்ளான ராஜாமணி வலையபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராஜாமணி அளித்த புகாரைத் தொடர்ந்து பொன்னமராவதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.