நாகப்பட்டினம், அக்.30 - திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட திருக்குவளை ஊராட்சியில், 2008 ஆம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. இதில் திருக்குவளை, பட்டுக்கோட்டை மற்றும் அரியலூர் பகுதிகளில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் உட்பட மொத்தம் 333 மாணவர்களுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ரா.வேல்ராஜ் உள்ளிட்டோர் பட்டங்களை வழங்கினர். இந்த விழாவில் கிராமப்புற ஏழை-எளிய மாணவர்கள் அதிகமானோர் பொறியியல் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.