தஞ்சாவூர், அக்.4- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை சார்பில் ‘உள்ளூர் வரலாறும் வழக்காறுகளும்’ எனும் சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். பதிவாளர்(பொ) முனைவர் சி.தியாகராசன், மொழிப்புலத்தலைவர் முனைவர் ச.கவிதா, நாட்டுப்புறவியல் துறை தலைவர் முனைவர் இரா.காமராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஜான் பீட்டர் ‘ஊர்ப் பெயர் ஆய்வு - வரலாற்றுப் பின்புலம்’ எனும் தலைப்பிலும், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ச.ரவி ‘வட்டார வரலாறும் வழக்காறும்’ எனும் தலைப்பிலும், கோவை பி.எஸ்.ஜி கல்லூரிப் பேராசிரியர் கா.கந்தசுப்பிரமணியம் ‘வழக்காறுகளும் வாழ்விட வரலாற்று எழுத்தியலும்’ எனும் தலைப்பிலும், சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர் சி. முத்துகந்தன் ‘தெருக்கூத்து வரலாறு எழுத்தியல்’ எனும் தலைப்பிலும் கருத்துரை ஆற்றினர். நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியர் சீமான் இளையராஜா வரவேற்றார். உதவிப் பேராசிரியர் முனைவர் நா.மாலதி நன்றி கூறினார்.