திருவாரூர், செப்.8 - டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் கடைமடை பகுதிகளில் கருகும் பயிர்களை நேரில் ஆய்வு செய்வதற்காக, வேளாண் துறையின் மாநில இயக்குநர்கள் தலைமையில் வேளாண் துறை இயக்குநர் எல்.சுப்பிரமணியன் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து மற்றும் வேளாண் அலுவலர்கள் பங்கேற்றனர். ஆய்வுப் பணிக்கு வந்திருந்த வேளாண் ஆணையர் எல்.சுப்பிரமணியனை நேரில் சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, மாவட்டச் செயலாளர் எம்.சேகர், பொருளாளர் வி.எஸ்.கலியபெருமாள், திருவாரூர் ஒன்றியச் செயலாளர் ஜி.பவுன்ராஜ் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், “திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றுள்ளது. கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் கடைமடை பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் பயிர்கள் கருகி உள்ளன. கருகிய பயிர்களை காப்பாற்ற, வாய்க்கால், குட்டைகளில் தேங்கிய தண்ணீரை டீசல் இன்ஜின் மூலம் விளைநிலங்களில் விட்டு கடும் முயற்சி எடுத்த நிலையிலும், பயிர்கள் கருகிவிட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாத்திட ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக குறுவைக்கு இன்சூரன்ஸ் இல்லாத நிலை தொடர்கிறது. மேலும், இயற்கை சீற்றம், தண்ணீர் தட்டுப்பாடு, மழை வெள்ளத்தால் பயிர்கள் சேதம் அடையும்போது விவசாயிகள் பெரும் பாதிப்பு உள்ளாகின்றனர். எனவே அரசே நேரடியாக இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதித்து, கர்நாடக அரசிடமிருந்து சம்பா சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க தமிழ்நாடு முதல்வர் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அறுவடை காலத்தில் 20 சதவீதம் வரை உள்ள பயிர்களை கொள்முதல் செய்திட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.