districts

அரசு புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 19 - அரசு நத்தம் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருவெள்ளறை ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தின் பின்புறம், தற்போது உள்ள ரேசன் கடைக்கு அருகில் பல ஆண்டுகளாக அரசு நத்தம் புறம்போக்கு இடம், குப்புசாமி செட்டியார் பழைய கட்டிடம் மற்றும் காலி மனை இடம் உள்ளது.  இவற்றை சில தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதற்கு சிலர் துணையாகவும் இருந்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மேற்படி அரசு இடத்தை பாதுகாத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, நிர்வாகம் இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் இதுவரை வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன் தலைமையில், திருவெள்ளறை கிராம நிர்வாக அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், “மக்களவை தேர்தல் முடிந்த உடன் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளிக்கப்பட்டது.  பேச்சுவார்த்தையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.சுப்பிரமணி, என்.சுப்பிரமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முருகேசன், சீனிவாசன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆனைமுத்து, சின்னசாமி, குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.