தஞ்சாவூர், நவ. 4 - ஏழை, எளிய மக்களின் மின்சாரப் பயன்பாட்டை கேள்விக்குறியாக்கும், தனியார் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியாமல், கேரள மாநில அரசு போல், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை நிறுத்தும், ஏழை மக்களின் மின்சாரம் பயன்படுத்தும் உரிமையை பாதிக்கும் இந்த திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்வாரிய அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை மின் பகிர்மான அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு, சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் கண்டன உரையாற்றினார். அம்மாபேட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.நம்பிராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் கண்டன உரையாற்றினார். மாரியம்மன் கோவிலில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி தலைமையில் நடந்த போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி கண்டன உரையாற்றினார். திருவோணம் ஒன்றியத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் கண்டன உரையாற்றினார். பூதலூர் தெற்கு ஒன்றியம் செங்கிப்பட்டி மின்சாரவாரிய அலுவலகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மனு கொடுக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருக்காட்டுப்பள்ளியில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் பங்கேற்றார். பட்டுக்கோட்டையில் நடந்த போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். இப்போராட்டங்களில் சிபிஎம் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
கும்பகோணம் மேலகாவேரி மின்வாரிய அலுவலகத்தில் நகரக் குழு உறுப்பினர்கள் சண்முகம், அன்புமணி, நாகராஜ் தலைமையிலும், வட்டி பிள்ளையார் கோவில் மின்வாரிய அலுவலகத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கண்ணன், பார்த்தசாரதி, ஆர்.ராஜகோபால் தலைமையிலும், காந்தியடிகள் சாலை மின்வாரிய அலுவலகத்தில் நகரச் செயலாளர் செந்தில்குமார், ரஞ்சித்குமார், சுப்புராமன் தலைமையிலும் மனு கொடுக்கப்பட்டது. நாணயக்கார தெரு மின்வாரிய அலுவலகத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் செல்வம், மணி, செந்தில்சுமதி தலைமையிலும், கும்பகோணம் ஒன்றியம் திருப்புரம்பியம் மின்வாரிய அலுவலகத்தில் ஒன்றியச் செயலாளர் கணேசன் தலைமையிலும், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் நாச்சியார்கோவில் மற்றும் செம்மங்குடி மின்வாரிய அலுவலகத்தில் ஒன்றியச் செயலாளர் பழனிவேல் தலைமையிலும் மனு கொடுக்கப்பட்டது. திருவிடைமருதூர் மின்வாரிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் சங்கர் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி உள்ளிட்டோர் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, மனு அளித்தனர்.