சென்னை, ஜுலை 25-
நகர்ப்புற வேலை ஊதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை மற்ற பேரூராட்சி - நகராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜூலை 25 செவ்வாயன்று தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தினர் ஆவேச போராட்டத்தில்ஈடுபட்டனர்.
கிராமப்புற - நகர்ப்புற வேலை நிலைமைகள் நாளுக்குநாள் மாறி வருகிறது. பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும், ஒன்றிய பாஜக ஆட்சியின் விவசாய கொள்கைகளினாலும் விவசாயம் - விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் மக்களின் வாழ்வாதாரம் நொறுங்கிக் கிடக்கிறது. அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் வேலை - வருமானம் இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 இல் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வேலை ஊதியத் திட்டத்தை அரசாணையை வெளியிட்டு 37 பேரூராட்சிகள், 7 நகராட்சிகள், 14 மாநகராட்சி வார்டுகளில் முதற்கட்டமாக செயல்படுத்தினார். இதர பேரூராட்சிகளில் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் அடுத்து வந்த 2 நிதி ஆண்டுகளிலும் நிதி ஒதுக்கீடு இல்லாததால் திட்டம் செயல்படுத்தப்பட்ட பேரூ ராட்சி, நகராட்சிகளில் படிப்படியாக நிறுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் வேலை பெற்று வந்த பயனாளிகள் தற்போதைய நிலைமையில் மிகுந்த துயரத்திலும் வறுமையிலும் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும். விவசாய மற்றும் சிறு-குறு தொழில்கள் பாதிப்பால் வேலையிழந்துள்ள தொழி லாளர்கள் வசிக்கும் பேரூராட்சி மற்றும் இதர நகர்ப்புற பகுதிகளிலும், திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும்.
நகர்ப்புற பகுதிகளில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பேரூராட்சி அலுவலகங்களில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவர் ஏ.லாசர் தேனி மாவட்டம் பண்ணைபுரம் பேரூராட்சியிலும், மாநில தலைவர் எம்.சின்னதுரை எம்.எல்.ஏ., திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சியிலும், மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியிலும், மாநில பொருளாளர் அ.பழநிசாமி விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சியிலும் பங்கேற்றனர். மாநில, மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் மாலை வரையிலும் போராட்டம் தொடர்ந்தது.