districts

நுகர்வோர் தங்கள் உரிமைகள், கடமைகளை அறிந்திருப்பது அவசியம்

அரியலூர்,  ஜூலை 28 -

       நுகர்வோர் அனைவரும் தங்களுக்கான உரிமைகள், கடமைகளை குறித்து அறிந்திருக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

      அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் செவ்வாய்க்கிழமை தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது.  

     இதில் ஆட்சியர் பேசுகையில், “நுகர்வோர் கடைகளில் ஒரு பொருளை வாங்கினால் மட்டும் போதாது. அதனுடைய தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாள், தர முத்திரை ஆகியவற்றை பார்த்த பிறகே பொருளை வாங்க வேண்டும். முக்கியமாக வாங்கும் பொருள்கள் அனைத்திற்கும் ரசீது பெறப்பட வேண்டும்.

    உணவுப் பொருள்களில் ஏதேனும் கலப்படம் மற்றும் குறைகள் இருந்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் அளிக்க வேண்டும். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும் அணுகலாம். இதுகுறித்து பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.  நுகர்வோர்கள் அனைவரும் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.

     பின்னர், நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.