கரூர், மார்ச் 24 - 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செ.ஜோதிமணி 2 ஆவது முறையாக போட்டியிடுகிறார். இந்தியா கூட்டணி கட்சிகளின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. கரூர் மக்களவைத் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செ.ஜோதிமணியை அறிமுகம் செய்து வைத்து, தொகுதி பொறுப்பாளர் அப்துல்லா பேசினார். வேட்பாளர் ஜோதிமணியை அதிக வாக்குள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என முடிவு செய்யப்பட்டது. மேலும், மார்ச் 27 அன்று வேட்பு மனுத் தாக்கல் செய்வது, அன்றைய தினம் பணிமனை திறப்பு விழா, அன்று மாலை செயல்வீரர்கள் கூட்டம் ஆகியவை நடைபெற உள்ளன என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.