அரியலூர், செப்.5- டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி விருது பெற்ற, செம்மொழி தமிழாய்வு முன்னாள் துணை இயக்குநர் க.ராமசாமிக்கு தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பினர் வாழ்த்து தெரிவித்தனர். அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் க.ராமசாமி (70). பெங்களூருவிலுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் துணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2006-2011 ஆம் ஆண்டு பொறுப்பில் இருந்த போது, தமிழ் மொழி செம்மொழியாவதற்கான அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மறைந்த கலைஞர் மு.கருணாநிதியிடம் அவற்றை சமர்ப்பித்தார். கலைஞரின் அன்பை பெற்ற இவர், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, அரியலூரில் 6 ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவை நடத்தினர். மேலும் இயல், இசை நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது தமிழ்ப் பணியை பாராட்டி, ‘டாக்டர் கலைஞர் செம்மொழி விருது’ வழங்குவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்காக சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முனைவர் க.ராமசாமிக்கு செம்மொழி விருதினை வழங்கி கவுரவித்தார். இதையடுத்து தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், அமைப்புச் செயலர் நல்லப்பன், புலவர் இளங்கோவன் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.