அரியலூர், டிச.17 - கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் தலைவர் மறைந்த தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு, புகழஞ்சலி கூட்டம் ஞாயிறன்று அரியலூரில் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மகத்தான தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் ஞாயிறன்று நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். சங்கரய்யா உருவப்படத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தி, சிறப்புரையாற்றினார். ஒன்றியச் செயலாளர்கள் அரியலூர் அ.அருண்பாண்டியன், செந்துறை கு.அர்ச்சுனன், தா.பழூர் ஜெ.ராதாகிருஷ்ணன், திருமானூர் ஆர்.புனிதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வாழ்த்துரை ஆற்றினர். கூட்டத்தில் மாவட்டக் குழு மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, கட்சியில் இணைந்தவர்களுக்கு செந்துண்டு அணிவித்து வரவேற்றார்.