புதுக்கோட்டை, ஜூலை 11- பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை கண்டித்தும், இதனை திரும்பப்பெற வேண்டும்.அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு உள்ளிட்ட ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், எஸ்.தேவமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பேசினர். திருச்சி சிஐடியு மாநகர் மாவட்டம், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் புதனன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சிஐடியு ரெங்கராஜன், அங்கன்வாடி ஊழியர் சங்க சித்ரா, மாவட்ட தலைவர் மல்லிகா மற்றும் தோழமைச்சங்க நிர்வாகிகள் பேசினர். கும்பகோணம் கும்பகோணத்தில் சிஐடியு சங்கங்கள், ஓய்வூதியர் கூட்டமைப்பு, மத்திய மாநில பொதுத்துறை நிறுவன ஊழியர் சங்கம் சார்பில் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் மா. கண்ணன் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், கைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் என்.பி. நாகேந்திரன் மாவட்ட குழு உறுப்பினர் சா. ஜீவபாரதி மாநில துணைத்தலைவர் பார்த்தசாரதி, ஆகியோர் பேசினர்.