தஞ்சாவூர், ஜன.20- 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் ஆனது. அவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயும் சேயும் நலமாக உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த முதுகாடு பகுதியைச் சார்ந்தவர் துரைராஜ் (34) விவசாயி. இவரது மனைவி தேவி (29) நிறைமாத கர்ப்பிணியான இவர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தேவிக்கு ரத்த அழுத்தக் குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து, முதலுதவி அளித்த மருத்துவர்கள் பேராவூரணி அரசு மருத்துவமனையில் இருந்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வியாழனன்று அனுப்பி வைத்தனர். துணைக்கு துரைராஜ் மற்றும் தேவியின் தாயார் உடன் சென்றனர். 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுநர் பிரபு அவசரமாகவும் கவனமாகவும் இயக்கிக் கொண்டிருந்தார். அதில் மருத்துவ உதவியாளர் பிரகாஷ் என்பவர், பணியிலிருந்தார். இந்நிலையில் பேராவூரணியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அம்மையாண்டி- வீரராகவபுரம் என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது தேவி பிரசவ வலியால் துடித்தார். இதையடுத்து வாகனத்தை ஓரமாக நிறுத்தி மருத்துவ உதவியாளர் பிரகாஷ் முதலுதவி செய்தார். இதில் அதிகாலை 1.47 மணிக்கு தேவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சைக்குப் பிறகு விரைந்து சென்று, தேவி மற்றும் குழந்தையை புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அங்கு மருத்துவர்கள் சிகிச்சைக்கு பிறகு தாயும் சேயும் நலமாக உள்ளனர். இக்கட்டான நேரத்திலும் சாதுரியமான முறையில் செயல்பட்டு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் பிரகாஷ் மற்றும் வாகனத்தை திறமையாக இயக்கிய ஓட்டுநர் பிரபு ஆகியோருக்கு தேவியின் கணவர் துரைராஜ் மற்றும் தேவியின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மேலாளர் கண்ணன் கூறுகையில், ‘‘பயன்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் அட்வான்ஸ் லைப் சப்போர்ட் வாகனம் எனவும், இதில் டெலிவரி கிட், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் வசதி உள்ளது. ஆபத்தான கட்டத்திலும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சிறப்பான முறையில் செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்றி பத்திரமான முறையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்’’ என தெரிவித்தார். தேவிக்கு இது மூன்றாவது குழந்தை என கூறப்படுகிறது.