மயிலாடுதுறை, ஜூலை 12 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள இலுப்பூர் ஊராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இலுப்பூர் ஊராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் வாய்க்கால், குளங்களை மீட்க வேண்டும். சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் சாலையை மறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலுப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தியின் மகன் கதிரவன் (36) அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் வாய்க்கால், குளங்களை மீட்டுத் தர வலியுறுத்தி கடைவீதி அருகில் உள்ள செல்போன் டவர் உச்சியில் ஏறி, தலைகீழாக நின்று சுமார் 4 மணி நேரம் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் லாமேக், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, ஒன்றிய ஆணையர் மஞ்சுளா உள்ளிட்ட அதிகாரிகள் இளைஞரிடம் ஒலிபெருக்கி மூலம், தங்கள் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் கதிரவன் பாதுகாப்பாக கீழே கொண்டு வரப்பட்டார்.